சாப்பாட்டுக்கடை - சைதை ஆஞ்சநேயர் கோவில் தெரு கையேந்தி பவன்.
என்னடா இது கடைக்கு பேரே இதுதானா? என்று யோசிக்கிறீர்களா? என்ன செய்வது கடைக்காரர் இன்னும் பெயர் வைக்கவேயில்லை என்கிறார். கடந்த சில வருடங்களாய் எங்கள் அலுவலகம் இருக்கும் தெருவில் ஒரு ப்ளாட்டின் மதில் சுவரை ஒட்டி சின்ன டிபன் கடை முளைத்தது. ஆரம்பத்தில் வியாபாரம் கொஞ்சம் சுணக்கமாகவே நடந்து கொண்டிருந்தாலும் கொஞ்சம் கொஞ்சமாய் சுறுசுறுப்பானது. நானும் ஒரு நாள் அங்கே சாப்பிட்டு பார்க்க வேண்டும் என்று நினைத்துக் கொண்டேயிருப்பேன் ஏனோ அது நடக்காமலேயே இருந்தது. அதற்கு முதல் காரணம் அவர்கள் காலை டிபன் மட்டுமே அங்கே செய்கிறார்கள். காலை சிற்றுண்டி எனக்கு எப்போதுமே என் வீட்டில் தான். எனவே தான் அவர் கடையில் சாப்பிட வாய்க்காமல் இருந்தது.
சென்ற வாரம் குடும்பம் முழுவதும் மாமியார் வீட்டிற்கு சென்று விட சரி இன்று இந்தக்கடையில் சாப்பிட்டு பார்த்துவிடுவோம் என்று கையேந்தி பவனுக்குள் நுழைந்தேன். என்னைப் பார்த்ததும் என்ன சார்.. பார்சலா? என்றார் கடைக்காரர். இல்லை சாப்பிட என்றதும் சட்டென பரபரப்பாகி ஒரு சேரை எடுத்துப் போட்டு, சொல்லு சார்.. என்னா சாப்ட்றே? என்றதும் அங்கே சுடச்சுட பொங்கல் ஒருத்தர் சாப்பிடுவதை பார்த்ததும் பொங்கல் என்றேன். நல்ல சுத்தமான ப்ளேட்டில் ப்ளாஸ்டிக் பேப்பர் போட்டு, அதன் மேல் வாழையிலை வைத்து மூன்று கரண்டி பொங்கலை கொதிக்க, கொதிக்க போட்டு, அதன் மேல் கரண்டியால் ஒர் அழுத்து அழுத்தி, குழி செய்து ஒரு கரண்டி சாம்பார், பக்கத்தில் காரசட்னி, புதினாசட்னி என்று போட்டுவிட்டு ஒர் வடையையும் வைத்தார். வழக்கமாய் நான் வடை போன்ற வஸ்துக்களை கொஞ்ச்ம் சூடு இல்லாவிட்டால் புறக்கணித்துவிடுவேன். வேண்டாம் என்று சொல்லுவதற்கு முன்பே, கடைககாரர் “இப்பத்தான் போட்டது சார்.. யோசிக்காத நல்லாருக்கும்” என்று வைத்துவிட்டார்.
வழக்கமாய் பொங்கலில் நெய்க்கு பதிலாய் அதிகமான டால்டாவை போட்டு திகட்ட வைத்துவிடுவார்கள். இவர்கள் நிச்சயம் நெய் பயன்படுத்தியிருக்க வாய்ப்பில்லை என்றாலும் நல்ல தரமான டால்டாவை பயன்படுத்தியிருப்பார்கள் போல. கொஞ்சம் கூட காரலில்லை, திகட்டலில்லை. வழக்கமாய் பொங்கலில் இருக்கும் பயத்தம் பருப்பை விட கொஞ்சம் அதிகமாகவேயிருந்ததால் பொங்கல் மஞ்சமஞ்சேரென்று இருந்தது. ஆனால் சுவையில் ஏதும் குறைவில்லை. சாம்பாரில் ஒரு வாயும், மற்ற சட்னிகளில் ஒரு வாயும் தொட்டு சாப்பிட, சாப்பிட, நல்ல சூட்டுடன் இருந்த பொங்கல் சுவையாய் உள்ளுக்குள் சென்றது. வடையைப் பற்றி சொல்ல மறந்துவிட்டேன். என்னா ஒரு கிரிஸ்ப்னெஸ். சும்மா மொறு மொறுவென போடுவதற்காக காய்ந்த எண்ணெயில் தீயவிட்டு எடுக்காமல் நல்ல பதமான் நிலையில் எடுக்கப்பட்ட் வடைவாயில் போட்டால் கரைந்தது. உடன் ரெண்டு இட்லியையும் சாப்பிட்டேன். ஹோட்டலில் இருப்பது போல ரவையாய் அரைத்த மாவில்லை. இட்லி மாவில் சுட்டது. முருகன் இட்லிக்கடை இட்லிக்கு ஏதும் குறைவில்லாத இட்லி. என்ன கொஞ்சம் கலர் மட்டும் மட்டாய் இருந்தது. இவ்வளவு தூரம் சாப்பிட்டுவிட்டோம் அவர்களிடமிருக்கும் ஒரே மிச்ச அயிட்டமான தோசையை சாப்பிட்டுவிடுவோம் என்று ஒரு தோசையையும் ஆர்டர் செய்தேன். நல்ல வீட்டு தோசை. சற்றே பெரியது. நல்ல புளிக்காத தோசை மாவு. வழக்கமான ஹோட்டல் கிரிஸ்ப் இல்லாவிட்டாலும் ஓகே. சாப்பிட்டு விட்டு பில் எவ்வளவு என்று கேட்டேன். முப்பது ரூபாய் என்றார். இவ்வளவு சல்லீசான விலையில் இவ்வளவு சுவையான காலை உணவு என்பது தற்போதைய காலத்தில் அதிசயம்தான். என்ன ரோட்டில் நின்று கொண்டு சாப்பிட வேண்டும் என்று யோசித்தால் பார்சலே சரணம். நான் போன அன்று கடைக்காரரும், மற்றொரு கஸ்டமரும் பேசிக் கொண்டிருந்தது. அம்மா ஓட்டலில் ஒரு ரூபாய் இட்லியைப் பற்றியும் சாம்பார் சாதத்தை பற்றியும்தான். கஸ்டமர் அதெல்லாம் ரொம்ப நாள் முடியாதுங்க.. ரெண்டு மாசத்தில காலியாயிரும். என்று ஆறுதல் சொல்ல, கடைககாரர் “இல்லீங்க ஒரு அரசு நடந்ததணும்னு நினைசசா நிச்சயம் முடியும். நம்ம ஆளுங்களுக்கு இத விட சீப்பா சாப்பாடு கிடைச்சா நல்லதுதானே?” என்றார். வாழ்க அவர் எண்ணம்.
கேபிள் சங்கர்
address
மேற்கு சைதாப்பேட்டை 18 கே பஸ் டெர்மினஸிலிருந்து நேராக அன்னை வேளாங்கண்ணி பள்ளிக்கு போகும் வழி தான் ஆஞ்சநேயர் கோயில் தெரு. சைதாப்பேட்டை மார்கெட் வழியாக வருகிறவர்களுக்கு ஐந்து லைட் அருகிலிருந்து அன்னை வேளாங்கண்ணி பள்ளிக்கு போகும் வழி என்று கேளூங்கள். பள்ளிக்கு கொஞ்சம் முன்பு வலது புறம் திரும்பினால் ஆஞ்சநேயர் கோயில் தெரு.
கேபிள் சங்கர்
address
மேற்கு சைதாப்பேட்டை 18 கே பஸ் டெர்மினஸிலிருந்து நேராக அன்னை வேளாங்கண்ணி பள்ளிக்கு போகும் வழி தான் ஆஞ்சநேயர் கோயில் தெரு. சைதாப்பேட்டை மார்கெட் வழியாக வருகிறவர்களுக்கு ஐந்து லைட் அருகிலிருந்து அன்னை வேளாங்கண்ணி பள்ளிக்கு போகும் வழி என்று கேளூங்கள். பள்ளிக்கு கொஞ்சம் முன்பு வலது புறம் திரும்பினால் ஆஞ்சநேயர் கோயில் தெரு.
Comments
Amma unga office address ennna
nalla manasukkarangaloda samayal taste sumara irundalum healthyagave irukkum. kadaisi varigalil kaiyendhibhavan owneraga irunthalum avaruda nalla ennam velipattu "Hero" aagivittar. location landmark address please. hats off. thanks for sharing.
anbudan
sundar g rasanai chennai