Thottal Thodarum

Jul 29, 2024

சாப்பாட்டுக்கடை - மெட்ராஸ் பாயா ஹவுஸ்.



இந்த பேரை நண்பர் குசும்பன் போய் சாப்பிட்டு எழுதிய போதுதான் தெரிந்தது. கடை ஆரம்பித்து ரெண்டாவது நாளில் எழுதியிருந்தார். வழக்கமாய் பாயா சாப்பிட வேண்டுமென்றால் ஒரிரு இடங்களில் இருக்கிறது. பெரும்பாலும் அது மலையாளிகளின் ஓட்டல்களாய் இருக்கும். சரி ஒரு நடை போய்விட்டு வருவோம் என்று கிளம்பிப் போனோம். மெட்ராஸ் பாயா என்றதும் ஏதோ பெரிய கடை என்று எண்ணியது தவறு. அது மிகச் சிறிய பாஸ்ட் புட் அவுட்புட் போலத்தான் இருந்தது. 

இட்லி, இடியாப்பம் காம்போக்கள் நிறைய இருந்தது. இடியாப்பம் பாயா ஆர்டர் செய்தோ. பாயா சூடாய் இருந்தது. வழக்கமான பாயாவின் டேஸ்டை விட கொஞ்சம் வித்யாசமாய் இருந்தது. காரம் கொஞ்சம் குறைவாகவே இருந்தது. நன்கு வெந்த கால்களின் மஜ்ஜையோடு பெயரைக் காப்பாற்றும் விதமாகவே இருந்தது. இருந்தாலும் ஏதோ ஒன்று குறைகிறது என்று குறித்துக் கொண்டேன். அடுத்ததாய் மட்டன் சுக்கா, இட்லி. மட்டன் சுக்கா பீஸ்கள் நன்கு வெந்து அட்டகாசமாய் இருந்தது. கூடவே கொஞ்சம் மீன் குழம்பும், சிக்கன் குழம்பும் ஊற்றி சாப்பிட்டு விட்டு வந்தோம். மீன் குழம்பு டிவைன். சிக்கன் குழம்பில் சின்ன கருத்தை சொல்லிவிட்டு வந்தோம். 

நான் வழக்கமாய் ஒரு கடையில் சாப்பிட்டால் உடனே வேற லெவல் கடை என்றெல்லாம் எழுத மாட்டேன். குறைந்த பட்சம் மூன்று மாதங்களில் நான்கைந்து முறையாவது போய்விட்டுத்தான் எழுதுவேன். அப்படி போகத் தூண்டிய கடைகள் மிகக் குறைவு. ஆனால் ஏனோ இந்த மெட்ராஸ் பாயா ஹவுஸுக்கு இரவு நேரங்களில் கொஞ்சம் தூரம் என்றாலும் போய் விட்டு வரலாம் எனும் எண்ணம் அவர்கள் கொடுத்த உணவின் ருசி மூளையிலிருந்து கிளப்பியது தான் காரணம். இன்னொரு முக்கிய காரணம் பர்ஸுக்கு பழுதில்லாத விலை. 

இம்முறை தோசை கல் எல்லாம் போட்டிருந்தார்கள். வழக்கம் போல இடியாப்பம் பாயா, தோசை சிக்கன் ஃப்ரை, கொஞ்சம் மீன் குழம்பு, சிக்கன் சுக்காவோடு அன்றைய உணவு முடிந்தது. தோசைக்கும் சிக்கன் சுக்காவுக்கும் செம்ம காம்பினேஷன். குடல் ஆர்டர் செய்திருந்தோம். டேஸ்டுக்கு கொஞ்சம் கொடுங்க என்று வாங்கி சாப்பிட்டுவிட்டுத்தான் ஆர்டர் செய்தோம். பெருமாலான இடங்களில் சரியாய் சுத்தம் செய்யாத குடல் தான் கிடைக்கும். இங்கே நன்கு வெந்த குடல், சரியான அளவு மசாலா. அளவான காரத்தோடு மிக அருமையாய் இருந்தது. இரவு நேரங்களில் குழம்பு மீன் சாப்பிட எனக்கு அவ்வளவாய் பிடிக்காது எனவே குழம்பு மட்டுமே மீண்டும் பாயா ஹவுசில் மீன் குழம்பும், மட்டன் சுக்காவும், பாயா என வரிசைக்கிரமாய் லிஸ்டில் டாப் 3யில் வந்து நின்றது. 

இதற்கு இவர்களின் கடையின் புதிய ப்ராஞ்ச் மற்றும் மதிய உணவை ஆரம்பித்திருந்தார்கள் அதுவும் நல்ல காம்பினேஷனோடு. மட்டன், சிக்கன், மீன் சைட்டிஷ்ஷுகளுடன் நெய் சோறு. அல்லது சாதம் எல்லாமே 200 ரூபாய்க்குள். நெய் சோறு சீரக சம்பா அரிசியில் நெய்யும், சீரக சம்பா அரிசியின் மணத்துடன், சிம்பிளான மசாலா மிக்ஸிங்குடன் மட்டன் குழம்புடன் அட்டகாசமாய் இருந்தது. குறிப்பாய் மட்டன் பீஸ் நன்கு வெந்து திக்கான கிரேவியுடன் இருக்க, கொஞ்சம் சாதத்துடன் கலந்து சாப்பிட்ட போது நிஜமாகவே வேற வெலவில் இருந்தது. அதே தரத்துடன் சிக்கன் குழம்பும் இவர்களின் மாலை நேரத்து குழம்பை விட மிக அருமையாய் இருந்தது. மீன்குழம்பு வழக்கம் போல அட்டகாசம்.கோலா உருண்டை ஆர்டர் செய்திருந்தோம். சூடாய் சாப்பிட்டு இருந்தால் இத்தனை நுணுக்கமாய் கவனித்து இருக்க முடியுமா? என்று தெரியவில்லை. டெலிவரியில் வாங்கி சாப்பிட்டதால் கிடைத்த ஃபீட் பேக் கொஞ்சம் மாவு அதிகமாய் இருப்பதாய் பட்டது. ஆனால் அதே நேரத்தில் உள்ளே அரைத்த பீஸுகள் இல்லாமல் இல்லை. சிக்கன் 65 போன்லெஸ் இன்னொரு தரமான சைட். கொஞ்சம் ஆறினாலும் வேலையைக் காட்டிவிடும் சிக்கன் 65 நன்கு மேரினேட் செய்யப்பட்டிருந்த காரணத்தினால் டெலிவரியிலும் சிறப்பாய் இருந்தது. 

இவர்களின் வெஜ் காம்போவைப் பற்றி சொல்லியே ஆக வேண்டும். நாப் வெஜ் கடைகளிiல் வெஜ் சிறப்பாய் இருந்ததாய் அத்தனை சிலாக்கியமான அனுபவம் எனக்கு இருந்ததில்லை. குறிப்பாய் நெய் சோறுடன் தரும் வெஜ் குருமா. மாலை வேளையில் இவர்களின் வெஜ் ஸ்டூவுடன் இடியாப்பம் சாப்பிட்டிருக்கிறேன். அதையே கொஞ்ச கெட்டியாக கொடுத்திருப்பார்கள் என்று நினைத்திருந்தேன். பட். இல்லை. அட்டகாசமான தேங்காய் அரைத்துப் போட்ட குருமா. அதிக காரமில்லாத அதே நேரத்தில் அதிக மசாலா இல்லாமல் காய்கறிகளுடனான குருமா. செம்மையாய் இருந்தது. அடுத்த சாதத்துடன் சாப்பிட, சாம்பார், ஒரு பொரியல், ரசம், வத்தக்குழம்பு காம்பினேஷன் வாங்கியிருந்தோம். சாம்பார் அத்தனை சிலாக்கியமாய் இல்லை. ஆனால் அந்த வத்தகுழம்பிருக்கே வத்தக்குழம்பு.. வாவ்.. வாவ். சரியான காரம், மற்றும் புளீப்புடனான காம்பினேஷன் அடிபொலி. அதே போல ரசமும். வழக்கமாய் இம்மாதிரியான வெஜ் காம்பினேஷனில் தரும் பீட்ரூட். அல்லது கோவைக்காய் பொரியல் இல்லாமல் பீன்ஸு பொரியல் அனுப்பியிருந்தார்கள். மிகச் சிறப்பு.

இன்னும் கொஞ்சம் இம்ப்ரூவ் செய்ய வேண்டிய அயிட்டங்களாய் சிக்கன் குருமா, சாம்பார், மட்டன் கோலா உருண்டை போன்றவைகள் சில லிஸ்டில் இருக்கிறது. வழக்கமாய் சாப்பிட்டு ரிவ்யூ சொல்லிவிட்டு வந்தால் சரி பண்ணிடலாம் என்று வாய் வார்த்தையாய் சொல்லி பார்த்திருக்கிறேன். இவர்கள் அதை ஜெனியூனாக எடுத்துக் கொண்டு சரி செய்ய முயல்கிறார்கள். 

 இப்போது இவர்கள் இரண்டு இடங்களில் கடை நடத்துகிறார்கள். விரைவில் திநகரிலும் ஆரம்பிக்கப் போவதாய் சொல்லியிருக்கிறார்கள். நீங்களும் ஒரு முறை சுவைத்துப் பார்த்து சொல்லுங்கள். வயிற்றுக்கும் பர்சுக்கும் இதமான உணவகம்.

Mandaveli Branch 62/76, Bharathi Nagar South Canal Bank Rd Guindy Branch 40 Sardar Patel Road

கேபிள் சங்கர்.

29-07-2024

Jul 21, 2024

ஒளியை காவு வாங்கப் போகும் ஒலி

 சினிமாவைப் பற்றி மாய்ந்து மாய்ந்து எழுதும், பார்க்கும் இளைஞ/ஞிகள் ஒரு பக்கம் இருந்தாலும், இன்னொரு பக்கம் டேஞ்சரான ஒரு ஜெனரேஷன் சினிமாவை அணுகிக் கொண்டிருக்கிறது. அது சினிமாவை கேட்கும் இளைஞ/ஞிகள் கூட்டம். அதிலும் குறிப்பாய் பெண்கள். இவர்கள் படமே பார்ப்பதில்லை. ஆனாலும் பல ஆங்கில/உலக படக்கதைகளைப் பற்றி அவர்களுடன் பேசினால் அய்ய அது போர். இது ஓகே என்று எல்லாம் விமர்சனங்கள் கிடைக்கும். எப்ப பார்த்தே என்று கேட்டால்? யாரு பார்த்தாங்க கேட்டேன் என்கிறார்கள். எங்கேனு கேட்டதற்கான பதில் யூடியூபில் எந்த படமாக இருந்தாலும் அதன் டிரைலரை வைத்தோ? அல்லது அந்த படத்தின் புட்டேஜை வைத்தோ லைன் பை லைன் கதை சொல்கிறார்கள். மேக்சிமம் அரை மணி நேரத்தில் கதை சொல்லி விடுகிறார்கள். விடாமல தொடர்ந்து மூச்சு விடாமல் சொல்கிறார்கள். இதை கேட்டா நீ விமர்சனம் பண்ணுறே? என்று கேட்டதற்கு இந்த படத்துக்கு எல்லாம் இதுவே போதும் என்கிற விமர்சனமும் கிடைத்தது. இவர்களுக்கு பல படங்களின் பெயர்கள் நியாபகத்தில் இல்லவே இல்லை. குறிப்பாய் வெளிநாட்டுப் படங்கள். கதை சொல்லிகளின் சேனல்கள் எனக்கு தெரிந்து இருபதாவது லீடிங்கில் இருக்கிறது. சரி இப்படி கதை கேட்ட படத்தை எப்போதாவது டிவியில், அல்லது ஓடிடியில் படமாய் பார்க்க விழைந்திருக்கிறீர்களா? என்று கேட்டால் வேற வேலையில்லை. ஒரே படத்தை எத்தனை வாட்டி கேக்குறதாம் என்கிறார்கள்.

டிவி சீரியல் பாக்கும் பல பெண்கள் பெரும்பாலும் வேலைகளுக்கு நடுவே கேட்டுக் கொண்டிருப்பதைதான் பார்ப்பதாய் சொல்லுவதை நாம் ஏற்கனவே பார்த்திருக்கிறோம். எனவே பெண்கள் இம்மாதிரியான சேனல்களில் கேட்பதை பார்ப்பதாய் சொல்வது ஒன்றும் புதிதில்லை. ஆனால் இந்த லிஸ்டில் ஆண்களும் சேர்வது கொஞ்சம் பயமாய்த்தான் இருக்கிறது. பலர் வழக்கமாய் கேட்கும் ஸ்பீடில் இல்லாமல் 2xல் எல்லாம் வைத்து கேட்கிறார்கள். அதை முதல் முறை ஃபாலோ செய்வது நமக்கெல்லாம் ஆகாத காரியம். என் இளைய மகன் அவனது சி.ஏ. கிளாசையே 2xல் தான் கேட்டுப் படிக்கிறான். உனக்கு புரியுதா என்று கேட்ட போது. நிறுத்தி நிதானமாய் அதை திரும்பச் சொன்னான். மகளொருத்தி ஆடியோ கதைகளை மட்டுமே கேட்டுக் கொண்டிருக்கிறாள். எந்த படத்தின் கதை கேட்டாலும் இதை கேட்டுட்டேன் என்பாள்.என் நண்பர் ஒருவர் வீடியோவில் ஸ்ட்ரீமிங் ஸ்பீடை அதிகப்படுத்தி ஒன்னரை மணி நேர படத்தை ஒரு மணி நேரத்தில் பார்த்துவிடுவார்.

இப்படியான நிலையில்தான் ஆடியோவாய் பல புத்தங்களை எழுத்தாளர்கள் அனுமதியில்லாமலேயே வெளியிட்டு சம்பாரித்துக் கொண்டிருக்கிறார்கள். கேட்டால் இதை கேட்டுவிட்டு எதிர்காலத்தில் அந்த எழுத்தாளரின் புத்தகத்தை விலை கொடுத்து வாங்கி அவரை வாழ வைப்பார்கள் என்று முட்டு வேறு கொடுப்பார்கள்.

20+ இளைஞர்கள் பெரும்பாலும் சிறு முதலீட்டு படங்களைப் பார்ப்பதேயில்லை. அதற்கான உதாரணம் என்னைச் சுற்றியுள்ள சினிமா சம்பந்தப்படாத இளைஞர்கள். இவர்கள் பெரிதாய் விளம்பரப்படுத்தப்பட்ட பெரிய பட்ஜெட் படங்கள். ஸ்டார் படங்களை மட்டுமே முதல் வாரத்தில் பார்க்கிறார்கள். இல்லையென்றால் பெரிய அளவில் விமர்சனங்கள் தேவையாய் இருக்கிறது. சமீபத்திய இந்தியன் 2 வை எனது மகன்கள் உட்பட, அவர்கள் நண்பர்கள் வட்டாரத்தில் ஒருவர்கூட பார்க்கவில்லை என்கிறார்கள். காரணம் ரிவ்யூஸ் சரியில்லை என்பதுதான். சரி டீன்ஸையாவது பார்த்தார்களா என்று கேட்டால் அதற்கும் அதே பதில் தான். சிறு முதலீட்டு படங்களின் விமர்சனங்கள் இவர்களிடம் ரீச் ஆகும் நேரத்தில் படம் இருக்க வேண்டும். அப்படி இல்லையென்றால் இப்படியான ஆடியோ சேனல்கள். அல்லது டபுள் ஸ்பீடில் படம் பார்க்கிறார்கள். இவர்கள் சமீப காலங்களில் மிகவும் அடிக்ட் ஆக இருப்பது அனிமே சேனல்களில் தான். அதனால் தான் எல்லா ஓடிடி தளங்களும் அனிமேவுக்கு மிகவும் முக்யத்துவம் கொடுக்க ஆரம்பித்துவிட்டது. ஒரு சிரீஸை பார்க்க ஆரம்பித்தால் நிச்சயம் தொடர்ந்து பார்க்க ஆரம்பித்துவிடுவீர்கள். அப்படியான வேகமான, பேண்டஸியான கதை சொல்லல் அதில் இருக்கிறது.

இவ்வருட ஹிட்டான அரண்மணை 4, கருடன், மஹாராஜா ஆகிய படங்களில் அதிகமான மக்கள் திரையரங்களில் போய் பார்த்த படம் அரண்மனை 4 தான். மற்ற இரண்டு படங்களும் ஹிட் தான் என்றாலும் திரையரங்களில் பெருவாரியான மக்கள் பார்க்கவில்லை. பெரும்பாலும் அப்படங்களைப் பார்த்தவர்கள். 30+ வயதுடையவர்கள்தான். அதனால் தான் இவ்வளவு பெரிய விமர்சனங்களைப் பெற்ற படங்களுக்கு வசூல் 30-40 கோடிக்குள். ஆனால் அதே அரண்மனை4 பற்றிய விமர்சனங்கள் பெரிதாய் இல்லாவிட்டாலும் குடும்பம் குட்டிகளுடன் இளைஞர்களும் போய் பார்த்ததினால் தான் 60-70 கிராஸ். திரையரங்கில் போய் பார்க்கும் படங்களில் ஒரு கொண்டாட்ட மனநிலை உள்ள படங்கள் தான் கூட்டம் வருகிறது. அப்படி இல்லாத படங்கள் ஓ.டி.டிதான். சரி ஓடி.டியில் வந்தவுடன் என்ன ரிசல்ட் என்று யோசிக்கும் போது அதற்கு ஆப்பு வைக்கும் இடத்தில் தான் இந்த ஆடியோ கதை சொல்லிகள். ஓடிடியில் வந்ததும் படத்தின் புட்டேஜை சின்னச் சின்னதாய் எடுத்து கதை சொல்லும் இடங்களுக்கு பின்னணியில் அதை வீடியோவாக ப்ளே செய்து, படம் பார்க்கும் இந்த கூட்டத்திற்கு ஆப்பு வைக்கிறார்கள். ரெண்டு நாள் முன் தான் Omli Music Sathya Moorthy உடன் பேசிக் கொண்டிருக்கும் போது இன்னும் சில வருடங்களில் ஆடியோ தான் உலகை ஆளப் போகிறது என்று விசில் லாஞ்ச் சமயத்தில் அட்டெண்ட் செய்த செமினாரில் பேசியதைப் பற்றி பேசிக் கொண்டிருதோம். இதையும் யாராவது படித்து ஆடியோவாக விட்டால் 2எக்ஸில் கேட்டாவது ரீச்சாகுமா? என்று பார்க்க வேண்டும்.

கேபிள் சங்கர்